ஓபிஎஸ் Vs எடப்பாடி.. 2 பேருமே கிடையாது.! முத்துராமலிங்க தேவர் தங்க கவச வழக்கில் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு

By Raghupati RFirst Published Oct 26, 2022, 5:51 PM IST
Highlights

முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை டிஆர்ஓ விடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி முக்கிய தலைவர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.

தேவர் தங்கக் கவசம் பெறுவதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு இடையே பெரும் போட்டியே நடக்கும் நிலையில், பசும்பொன் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.

தேவர் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்திக்கு பசும்பொன்னிற்கு மரியாதை செலுத்த வருவோர் காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

தேவர் ஜெயந்தி, குருபூஜை நிகழ்வையொட்டி, பசும்பொன்னில் அமைந்திருக்கும் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க கவசத்தை வங்கியிடம் பெற்று விழா கமிட்டியிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மோதி வருகின்றனர்.  ஜெயலலிதாவால் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை தங்கள் தரப்பிடம் ஒப்படைக்கக் கோரி இரு தரப்பினரும் வங்கியில் கடிதம் அளித்துள்ளனர்.

வங்கி நிர்வாகம் எந்த முடிவும் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா, சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் தங்கள் தரப்புக்கு தங்கக் கவசம் தர ஆதரவு கோரினர்.

ஆனால், யாருக்கும் சார்பாக இருக்க விரும்பவில்லை, நீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என காந்தி மீனாள் கைவிரித்துவிட்டார். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘அதிமுக உட்கட்சி பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட இயலாது.

அதிமுக சார்பில் வழங்கிய தங்கக்கவசத்தை ராமநாதபுரம் டிஆர்ஓ வங்கியில் இருந்து எடுத்துச்சென்று அணிவிக்க வேண்டும். தங்கக்கவசம் அணிவிக்கப்பட்ட பின் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கவும் ராமநாதபுரம் டிஆர்ஓவுக்கு அதிகாரம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தங்க கவசத்திற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் அதிரடியாக களத்தில் குதித்த சிபிசிஐடி

click me!