சிசிடீவி காட்சிகளை காட்டுங்க... வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்துங்க...!! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுரை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2019, 5:14 PM IST
Highlights

வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்" எனக்கூறி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள சிசிடிவி பதிவின் ஒரு நகலை, வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம் பாதுகாப்பாக வைப்பதற்கு தேர்தல் ஆணையம்  வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம்  வழங்க தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில்  தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும்  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி,  கௌரி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமானோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேலுமணி, தாரணி அமர்வு முன்பாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு எண்ணிக்கையை முழுவதுமாக வீடியோபதிவு செய்யக்கோரி முறையிட்டனர். வழக்கு விசாரணையின்போது, தேர்தல் ஆணையம் தரப்பில்," குறுகிய கால அவகாசமே உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது. அதோடு அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.  

அதற்கு நீதிபதிகள் இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் ஏன் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய இயலாது?  என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது," தேர்தல் ஆணையம் தரப்பில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மற்றும் அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும்  பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து நீதிபதிகள்," வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்" எனக்கூறி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள சிசிடிவி பதிவின் ஒரு நகலை, வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம் பாதுகாப்பாக வைப்பதற்கு தேர்தல் ஆணையம்  வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
 

click me!