
மதுரை ஆதீனத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மதுரை போலீஸ் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆதினங்களின் குத்தகை தொகையைத் தர ஆளுங்கட்சியினர் தராமல் இருக்கிறார்கள், என்னை மிரட்டுகிறார்கள் என்று மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் புகார் கூறியிருந்தார். மேலும் தருமபுரம் ஆதினம் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தமிழக அரசு தடை விதித்ததையும் கடுமையாக எதிர்த்து வருகிறார் மதுரை ஆதினம். ‘எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பிரதமர் மோடியையும் உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பேன்’ என்றும் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்குமார், நீலமேகம் ஆகியோர் மதுரை ஆதினத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ ஹரிகர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் 293-வது குரு மகா சன்னிதானமாக பதவி ஏற்று செயல்படுகிறார். சமீபத்தில் தருமபுர ஆதீனம் பல்லாக்கு தூக்குவது தொடர்பான அரசின் தடையையும், இறை வணக்கத்திற்கு எதிரானவர்களை கண்டித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் இந்து விரோத சக்திகளால் அவருக்கு ஆபத்து நிகழும் சூழல் உள்ளது. ஆதீனத்திற்கு சொந்தமான கடைகள், சொத்துக்கள் மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளன. அதிலுள்ள வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூலிக்க மதுரை ஆதீனம் தீவிரம் காட்டியுள்ளார்.
வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் ஆதீனத்திற்கு எதிராக தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது தொடர்பாக மதுரை ஆதீனமடத்திற்கு வழக்கறிஞர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, மடத்திற்கும், மடத்தைச் சார்ந்த வர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பது தெரியவந்தது. மேலும், இது சம்பந்தமாக மதுரை ஆதீனத்தை நேரில் சந்தித்து உண்மை நிலையை விசாரித்தபோதும், இந்து விரோத சக்திகள் மூலம் தனது உயிருக்கும், ஆதீன மடத்திற்கும் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக தெரிவித்தார். எனவே , அவரது உயிருக்கும், உடைமைக்கும் தகுந்த பாதுகாப்பு அளிப்பதோடு, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் வழங்க வேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.