Maanaadu: டேக் டைவர்ஸன்.. ஜெய்பீம் ஓவர் ஓவர்.. மாநாடு படத்தை தடை செய்யணும்.. களத்தில் குதித்த பாஜக.!

By Asianet TamilFirst Published Nov 27, 2021, 9:21 PM IST
Highlights

கோவை குண்டு வெடிப்புப் பற்றி  தவறான தகவல்கள் படத்தில் உள்ளன. மேலும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘மாநாடு’ படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் வீட்டு முன்பு விரைவில் போராட்டம் நடத்துவோம்.

மாநாடு படத்தை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பல இடைஞ்சல்கள், எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தைப் பற்றி நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாள் கழித்து வெங்கட் பிரபுவும் சிம்புவும் சிறந்தப் படத்தைக் கொடுத்திருப்பதாக அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். படத்தில் பல அதிரடியான வசனங்கள் இடம் பெற்றுள்ளான.

குறிப்பாக, “அமெரிக்காவில் குண்டு வெடித்தால் தீவிரவாதி என்கிறோம். அதுவே இந்தியா என்றால் முஸ்லீம் தீவிரவாதி என்கிறோம். தீவிரவாதிக்கு ஏது சாதி, மதம்” என்று வசனங்கள் உள்ளன. மேலும் சில காட்சிகள் குறியீடுகளாக வந்துபோகின்றன. ஏற்கெனவே ‘ஜெய்பீம்’ படம் குறியீடுகளால் சர்ச்சையைச் சந்தித்த நிலையில், இப்படம் பற்றியும் சர்ச்சை எழுமோ என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே பாஜக படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அக்கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், முதல் குரலாக ‘மாநாடு’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வேலூர் இப்ராஹீம்,  “இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக மாநாடு படம் அமைந்திருக்கிறது. படத்தில் போலீசாரையே தீவிரவாதிகள் போல சித்தரித்திருக்கிறார்கள். கோவை குண்டு வெடிப்புப் பற்றி  தவறான தகவல்கள் படத்தில் உள்ளன. மேலும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சர்சைக்குரிய காட்சிகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

 ‘மாநாடு’ பட விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும். உடனடியாக இந்தப் படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், ‘மாநாடு’ படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் வீட்டு முன்பு விரைவில் போராட்டம் நடத்துவோம். பொதுவாக பாஜக புகார் அளித்தால் காவல் துறை நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை.” என்று வேலூர் இப்ராஹீம் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் படத்துக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக சர்ச்சை நீடித்து வந்த நிலையில், தற்போது அது மாநாடு படத்துக்கு மாறியிருக்கிறது.

click me!