கேரளாவுக்கு உதவுங்கள்... அறிவாலயத்துக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புங்கள்.. மு.க. ஸ்டாலின் கோரிக்கை!

By Asianet TamilFirst Published Aug 12, 2019, 10:19 PM IST
Highlights

மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளான மக்கள், சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளை இழந்து, உறவினர்களை பறிகொடுத்து கேரள மாநிலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். 

கேரள மக்களுக்கு உதவிட நிவாரணப் பொருட்களை அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்பி வைக்குமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:


கேரள மாநில மக்கள் மீண்டும் கனமழையிலும் பெரு வெள்ளத்திலும் சிக்கி பேரிடருக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று வருகிற செய்திகள் இதயத்தை கனக்க வைப்பதாக உள்ளது. அங்கு  நிலச் சரிவுகளில் இதுவரை 83 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கிறார்கள். 60 பேர்வரை காணாமல் போய் இருக்கிறார்கள் என்பதை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு துயரச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.
மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளான மக்கள், சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளை இழந்து, உறவினர்களை பறிகொடுத்து கேரள மாநிலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகள் எல்லாம் நட்புறவுடன் கேரள மக்களுடன் பழகி வரும் நம் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த வேதனையைத் தருவதாக அமைந்துள்ளது.
கேரளா அரசு நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருக்கின்ற போதிலும் அண்டை மாநில மக்கள் என்கிற முறையில் நாமும் இந்தப் பேரிடரால் ஏற்பட்ட துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மாநில மக்களுக்கு உதவிட வேண்டும். எனவே கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வேண்டிய பல்வேறு நிவாரண பொருட்களை தி.மு.க. தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!