சட்டப்பேரவையை எப்போ கூட்டப்போறீங்க..? தேவையில்லாத நெருக்கடி ஏற்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

By Asianet TamilFirst Published Jun 10, 2019, 7:49 AM IST
Highlights

ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டவே அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு முறையும் பிரதான எதிர்க்கட்சி குரல் எழுப்ப வேண்டிய நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவது-அதிமுக அரசுக்கு ஆக்கபூர்வமான விவாதங்களின் மீது இருக்கும் அவநம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 

சட்டப்பேரவை கூட்டப்படுவதை மேலும் தள்ளிப் போடுவது, தேவையில்லாத குழப்பங்களுக்கும் நெருக்கடிக்கும் வழிவகுத்து விடும் என்றும் எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் என்று திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும்  தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்னும் நடைபெறாமல் இருப்பதும், அதன் காரணமாக அரசு துறைகளின் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதும், மிகுந்த வேதனையளிக்கிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்க வேண்டிய சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டவே அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு முறையும் பிரதான எதிர்க்கட்சி குரல் எழுப்ப வேண்டிய நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவது-அதிமுக அரசுக்கு ஆக்கபூர்வமான விவாதங்களின் மீது இருக்கும் அவநம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும்  இந்த அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை. அலட்சிய மனப்பான்மையில் ஆட்சி செய்யும் அதிமுக அரசு, தற்போது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம், குறுவை சாகுபடிக்கான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாத அவல நிலைமை, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் இன்றுவரை கர்நாடகம் தண்ணீர் திறக்காதது, அதற்கு எவ்வித தொடர் நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காதது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது மத்திய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையால் தமிழ்நாட்டில் தொடரும் மாணவிகளின் “நீட்” தற்கொலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறதா? இல்லையா? என்ற நியாயமான கேள்வியை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த  மக்கள் பிரச்னைகளை எல்லாம் விவாதிக்கவும், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் பற்றி மக்கள் பிரதிநிதிகள் விவாதித்து பட்ஜெட் அறிக்கையின் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகளை வளர்ச்சி திட்டங்களுக்கும், தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்திடவும் உடனடியாக தமிழக சட்டப் பேரவையின் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வேளை தன்னைச் சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்களே தொடுக்கும் கேள்விக் கணைகளால் எழுந்துள்ள நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, தாமதம் செய்து பிரச்னைகளை தள்ளிப் போடுவதற்கு ஏதுவாக  சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முதல்வர் பயம் கொள்வாரானால், ஆளுநர் உடனடியாக தலையிட்டு பேரவையைக் கூட்ட ஆணை பிறப்பித்து ஜனநாயகக் கடமையை உரிய முறையில் ஆற்றிட வேண்டும். சட்டப்பேரவை கூட்டப்படுவதை மேலும் தள்ளிப் போடுவது, தேவையில்லாத குழப்பங்களுக்கும் நெருக்கடிக்கும் வழிவகுத்து விடும் என்றும் எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!