மோடிக்காக காத்திருந்த எடப்பாடி... ஒரு நாளுக்கு முன்னதாகவே பணியவைத்த மு.க.ஸ்டாலின், கமல்..!

By vinoth kumarFirst Published Apr 13, 2020, 5:25 PM IST
Highlights

ஊடரங்கை மேலும் நீடிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதற்கிடையே பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்கள் பிரதமரின் அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவித்துவிட்டனர்.

பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களின் கடும் விமர்சனத்தை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வழியாக ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 20 நாட்களைக் நிறைவடைந்துவிட்டது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், ஊடரங்கை மேலும் நீடிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதற்கிடையே பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்கள் பிரதமரின் அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவித்துவிட்டனர். ஆனால், கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் முதல்வர் காலம் தாழ்த்தி வந்தார்.  

இதனால், கடுப்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட தயக்கம் ஏன்? மத்திய அரசுக்கு பயந்தே ஊரடங்கு நீட்டிப்பை தமிழக முதல்வர் வெளியிடவில்லை. முதல்வரின் சுயநலம், கோழைத்தனத்தால் உயிர்களை இழக்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கடுமையாக விமர்சித்தார். ஆனாலும்,  தலைமைச் செயலாளர் சண்முகம் பிரதமர் அறிவிக்கும் முடிவின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார். இதனால், ஊரடங்கை நீட்டிக்கும் விஷயத்தில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் அமைதியாக இருப்பதுபோல தமிழக முதல்வரும் அமைதியாக இருப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

 இந்த விஷயத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துள்ளார். மற்ற மாநில முதல்வர்கள் தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்கிறார்கள். நீங்கள் (எடப்பாடி பழனிச்சாமி) எதற்காகக் காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வரே? உங்களுடைய எஜமானரின் குரலுக்காகவா? மக்களிடமிருந்தே என் குரல் வருகிறது. உங்கள் நாற்காலியில் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கையில் விழித்திடுங்கள் என கமல்ஹாசன் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர்ந்து நெருக்கடி மற்றும் விமர்சனங்களை அடுத்து பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒருவழியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

click me!