உள்ளாட்சித் தேர்தல் எப்போது ? தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிரடி திட்டம்….

By Selvanayagam PFirst Published Sep 4, 2019, 8:20 PM IST
Highlights

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றது.
 

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவி வருகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் உள்ளாட்சிப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள்  தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளிலும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் பலமுறை அவகாசம் கோரியது.

இந்த நிலையில் வரும் அக்டோபர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. பலமுறை இதேபோல நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்றே பலரும் நினைத்துவந்தனர். இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வார்டு வரையறை செய்வது, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது என உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் தற்போது தயாராகி வருகிறது. வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி வரும் 10ஆம் தேதி தமிழகம் திரும்ப இருக்கிறார். 

முதலமைச்சர்  வந்த பிறகு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மூன்று ஆண்டுகள் ஓரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் நவம்பரில் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும் என்றும் தமிக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!