நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேதி நாளை அறிவிக்க வாய்ப்பு... வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகள் தீவிரம்!!

By Narendran SFirst Published Jan 23, 2022, 10:33 PM IST
Highlights

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நீதிமன்றம் நாளை வழங்கும் உத்தரவை பொறுத்து தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. இந்நிலையில், ஜனவரி 31ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு  விதிகளை கடைபிடிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம்  சுற்றறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  தொடர்பாக பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு  செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தேர்தலை சந்திக்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் கடந்த 19ம் தேதி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா 3வது அலை உச்சம் பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

click me!