ஆபரேஷன் தியேட்டர் கட்டி அதிமுக தோல்வியை ஆய்வு செய்வோம்... சீரியஸாகப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் ..!

By Asianet TamilFirst Published Jun 20, 2021, 8:42 PM IST
Highlights

வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
 

சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் மாவட்ட அளவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். “சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் மெத்தனமாக இருந்தனர். அதனால்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியைத் தழுவினோம்.
இந்தத் தோல்வி குறித்து இங்கு ஆய்வு செய்ய முடியாது. வார்டு வாரியாக, கிளை வாரியாக ஆய்வு நடத்த வேண்டும். அதற்காக தனியாக ஒரு ஆப்ரேஷன் தியேட்டர் கட்டி அங்கு வைத்துதான் ஆய்வு செய்ய வேண்டும். சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. தேர்தலுக்கு முன்பே அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டதாக சசிகலா அறிவித்தார். தற்போது அரசியலில் முக்கியத்துவம் தேடிக் கொள்ளும் முயற்சியிலும் அதிமுகவை அபகரிக்கும் நோக்கிலும் செயல்படுகிறார். இதை  நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்துவருகின்றனர். அவர்கள் மத்தியில் சசிகலா குழப்பத்தை உருவாக்கி வருகிறார். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
 

click me!