தொலைதூர கல்வி மூலம் சட்ட படிப்புகள்: பதிலளிக்க, மத்திய-மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2020, 2:20 PM IST
Highlights

கடந்த 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டக் கல்வி விதிகளின்படி, தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்ய முடியாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொலை தூர கல்வி மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்ட படிப்புகள் வழங்குவதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய-மாநில அரசுகளுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூர கல்வி மூலம் மூன்று ஆண்டுகள் மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்திய பார் கவுன்சில் அங்கிகாரம் இல்லாமல் சட்டப்படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் நடத்துவது தொடர்பான விளம்பரத்தை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், இதற்கு முன் இந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டக் கல்வி விதிகளின்படி, தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகளை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்ய முடியாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் தகுதி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு சென்று படித்தவர்கள் மட்டுமே சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என விதி கொண்டுவரவும் யோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

click me!