10 வருஷமா சும்மா இருந்த பன்னீர்.. இதில் அரசியல் செய்யலாமா..? ஓபிஎஸ்சை வகுந்தெடுத்த அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 4, 2021, 3:41 PM IST
Highlights

10 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த முன்னாள் துணை முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் அறியாமல் இதுபோன்ற தொழிலாளர்களின் பிரச்சனையில் அரசியல் செய்வது தவறான ஒன்றாகும். இதுபோன்ற பணியாளர்களின் பிரச்சினைகளில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர் சந்தித்தார் அது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: 

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையில் 2457 ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 497 கோடியே 32 லட்சம் ரூபாய் ஓய்வூதிய பணப் பயன்களான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களின் நிலுவை தொகையினை வழங்கிட உத்தரவிட்டு, கடந்த 2-6-2021 அன்று முன்னோட்டமாக ஆறு ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப் பலன்களை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள். 

முதலமைச்சர் வழங்கிய அன்றைய தினமே, அனைத்து ஓய்வு பெற்ற பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலகட்டத்திலும்  தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உடனேயே, இந்த நிதியை ஒதுக்கீடு செய்து உடனடியாக வழங்கினார்கள். இந்நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன்னடிப்படையில்தான் முதலமைச்சர் அவர்கள் இந்த பண பலன்களை வழங்கினார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு வழங்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று. 

இந்தியாவிலேயே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் கவச உடை அணிந்துகொண்டு, நோயாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து, கொரோனா நோயின் இரண்டாம் அலையின் தாக்கத்தினை குறைத்துள்ளார். இந்த காலக்கட்டத்திலும் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் முன்னதாகவே இந்த நிதியை வழங்கிட வேண்டுமென்று 2-6-2021 அன்று வழங்கினார்கள். எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சி காலத்தில் தான் போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்துகளை அரசுடமை ஆக்கி போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கியதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கி சாதனை படைத்துள்ளதை அனைவரும் நன்கு அறிவர்.  

இந்த ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கிட கடந்த ஆட்சியில் 26-2-2021 அன்று இதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டது, அதற்கு மறுநாளே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தேர்தல் நடந்து பின்னர் புதிய அரசு பொறுப்பேற்ற உடன் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துதான் வழங்க இயலும், இந்த தொடர் நடவடிக்கைகளை 10 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த முன்னாள் துணை முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் அறியாமல் இதுபோன்ற தொழிலாளர்களின் பிரச்சனையில் அரசியல் செய்வது தவறான ஒன்றாகும். இதுபோன்ற பணியாளர்களின் பிரச்சினைகளில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என போக்குவரத்துறை அமைச்சர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
 

click me!