
திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறாக பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண் மீது வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த வதந்தி பரப்பிய வழக்கில் இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி குறித்து, பேஸ்புக்கில், ஆதாரமற்ற செய்தி ஒன்றை வாணியம்பாடியைச் சேர்ந்த பெண் சவிதா என்பவர் பதிவிட்டுள்ளார். அதில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை பதிந்துள்ளார்.
இந்த பேஸ்புக் பதிவுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மாவட்ட திமுக பிரமுகர் தேவகுமார், சவிதா மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, சவிதா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி குற்றவியல் 504, 505 பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.