கர்நாடக மாநில முதலமைச்சராக வரும் வெள்ளிக் கிழமை காலை வரை தான் குமாரசாமி நீடிக்க முடியும் என்றும் இதன் பிறகு அங்கு பாஜக ஆட்சி வரும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சதானந்த கவுடா தெரிவித்தார்.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணி 300 இடங்கள் வரையில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளில் வெல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுளளது.
கர்நாடகாவில் ஏற்கனவே காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இடையே பஞ்சாயத்து தொடர்கிறது. இப்போது இந்த கருத்துக் கணிப்பு முடிவு பாஜகவை உற்சாகம் அடைய செய்துள்ளது.
ஏற்கனவே கர்நாடகாவில் உள்ள ஆட்சியை கலைப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தல் வரையில் காத்திருக்க பாஜக டெல்லி தலைமை கூறியதாகவும், அதனால் எடியூரப்பா அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பாஜக தரப்பு தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் நாளை தேர்தல் முடிவு வெளியானதும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்க ஆப்ரேஷன் தாமரையை பா.ஜனதா முன்னெடுக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் சதானந்த கவுடா செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பாஜக முழு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்த அவர், முதலமைச்சராக இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார், அவரால் இரவு தூங்கவே முடியாது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி தோல்வி அடையும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அவர்களின் கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.