சென்னையில் மட்டும் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் போலீஸ் !! வாக்கு எண்ணிக்கையையொட்டி கமிஷனர் அதிரடி !!

By Selvanayagam PFirst Published May 22, 2019, 7:32 PM IST
Highlights

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
17 ஆவது நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டமன்றத்துக்கு இடைத் தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளன. இதில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. 

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களான ராணி மேரி கல்லூரி (வட சென்னை தொகுதி), அண்ணா பல்கலைக் கழகம் (தென் சென்னை தொகுதி), லயோலா கல்லூரி (மத்திய சென்னை தொகுதி) ஆகிய பகுதிகளில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன் , சென்னையில் உள்ள மூன்று வாக்குப்பதிவு மையங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 9 காவல்துறை துணை ஆணையர்கள் தலைமையில் 35 உதவி ஆணையர்கள், 91 ஆய்வாளர்கள், 300 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்..

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை காப்பதற்காகவும் சென்னை பெருநகர் முழுவதும் 7,000 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கூறினார்.

வாக்கு எண்ணிக்கை பணிக்காக நாளை சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் எனவும்  மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

click me!