
கர்நாடகாவில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது தொடர்பாக உணர்ச்சிப் பூர்வமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது என்றும், அரசு கருவூலத்திற்கு ஏற்படும் கடன் சுமையைக் கருத்தில் கொண்டு மட்டுமே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியும் என கர்நாடக மாநில முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இல்லாமல் ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எடியூரப்பா, தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தார். ஆனால் சட்டப் பேரவையில் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காங்கிரஸ் – மஜத கூட்டணி சார்பில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.தேவகவுடாவின் மகனான குமாரசாமி நாளை கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தியை குமாரசாமி. சந்தித்தார். இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தின்போது மஜதஅளித்த வாக்குறுதிகள் மற்றும் தேர்தலுக்குமுன்பான காங்கிரஸ் கட்சியினரின் விமர்சனங்கள் போன்றவை குறித்து, டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்துக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
அதில் மஜதவின் தேர்தல் அறிக்கையில், குமாரசாமி முதலமைச்சராகப் பதவியேற்ற 24 மணி நேரத்தில் கர்நாடக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி கூறிய குமாரசாமி, “விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தேன். இதுதொடர்பாக, உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். இதனால் அரசுக் கருவூலத்துக்கு ஏற்படும்கடன்சுமை பற்றி ஆராய்ந்து, அதற்கேற்றவழிகளைக் கண்டறிவோம் என தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி அளித்திருந்த வாக்குறுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவற்றைச் செயல்படுத்தும் நிலையில் இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னர், மஜதவை பாஜகவின் பி டீம் என்றும், குமாரசாமி கண்டிப்பாக முதலமைச்சர் ஆகமாட்டார் என்றும் விமர்சித்திருந்தது காங்கிரஸ் கட்சி. இதுபற்றிக் கேட்டபோது, தேர்தலுக்கு முன்னர் பேசியதெல்லாம் கடந்த காலம் என்றும், தான் வருங்காலத்தை மட்டுமே பார்ப்பதாகவும் பதிலளித்தார்.“
இப்படிப்பட்ட சூழலில் முதலமைச்சர் ஆவேன் என்று நான் நினைக்கவேயில்லை. தற்போதைய நிலையில் ஆட்சியமைப்பதும், அதனைத் திறம்பட செயல்படுத்துவதுமே பொருத்தமானது. விமர்சனங்கள் பற்றி எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன். மக்கள் என்னை சந்தர்ப்பவாதியாக நினைக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரான பின்பு நான் அப்படிப்பட்டவனல்ல என்பதை நிரூபிப்பேன்” என்றும் கூறினார்.
எடியூரப்பா விவசாயிகளின் கடன்கநை ரத்து செய்வதற்கான உத்தரவில் கையெழுத்து போட்டு விட்டார். இதை நடைமுறைப்படுத்த குமாரசாமி முயற்சி செய்வாரா ? பேசாமல் கிடப்பில் போட்டுவிடுவாரா ? என விவசாயிகளிடையே தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது.