பாஜகவில் இணையப்போகிறாரா ஜி.கே.வாசன்..? அதிரடி அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்..!

By vinoth kumarFirst Published May 10, 2019, 1:22 PM IST
Highlights

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் இணைய உள்ளதாக செய்தி வெளியான நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலுக்கு பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் இணைய உள்ளதாக செய்தி வெளியான நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மக்கள் தலைவர் என்று தமிழக மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் ஜி.கே.மூப்பனார். மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த இவர் ஒரு முறை  காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி திமுகவுடன் இணைந்து ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவர். இதேபோல் ராஜிவ் காந்தி  மறைந்தபோது ஒரு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு கூட மூப்பனாருக்கு கிடைத்தது. ஆனால் அதை திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதி தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் மூப்பனார் மறைந்த பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன், அக்கட்சிக்கு தலைமை ஏற்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் தமாகவை இணைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில், பத்தாண்டுகள், மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலர், இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி., என, பல பதவிகளை ஜி.கே.வாசன் வகித்து வந்தார். இதனிடையே காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கும், வாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனால், காங்கிரசை விட்டு விலகிய வாசன், த.மா.கா.,வை மீண்டும் தொடங்கினார். இதனிடையே மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ளது. இதனிடையே சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜி.கே.வாசன் டெல்லி சென்றுள்ளார். த.மா.கா.வை பாஜகவில் இணைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும், இதுதொடர்பாக பாஜக தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”காங்கிரஸ் கட்சியில் தங்களது வாழ்க்கையை தொடங்கிய இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.கவில் இணைவது என்பது தற்கொலைக்கு சமம். எந்த இயக்கத்தோடு பல வருடங்களாக இரண்டறக் கலந்து உணர்வுபூர்வமாக பணியாற்றினோமோ, அந்த இயக்கத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருந்தாலும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. பா.ஜ.க.வில் சேருவது என்பதை உங்களால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாது.  

பெருந்தலைவர் காமராஜரை 1966 ஆம் ஆண்டு தலைநகர் தில்லியில் உயிரோடு எரிக்க முயன்ற வகுப்புவாத கும்பலின் வாரிசாக விளங்குகிற பா.ஜ.க.வோடு சேருவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா ? 1999 இல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணமாக இருந்த மூன்று வாக்குகளை அளித்து உதவிய மக்கள் தலைவர் மூப்பனார் வழிவந்த நீங்கள் பா.ஜ.க.வில் சேருவதை ஏற்றுக் கொள்வீர்களா ? தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை பா.ஜ..கவில் சேருவது என தவறான முடிவெடுத்தால் அந்த முடிவை காங்கிரஸ் உணர்வுள்ள இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். எதை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ, அதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியும். பா.ஜ.க.வில் இணைவது என்ற முடிவு அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகும்.

எனவே, நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற அனைவரையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில் இருகரம் கூப்பி அன்போடு அழைக்கிறேன். இளம் தலைவர் ராகுல்காந்தியின் போர்ப்படையில் இணைய உடனடியாக வாருங்கள். உங்களுக்காக சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன. இது உங்கள் தாய் வீடு. இங்கே வருவதற்கு உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம். உங்களை ஆதரிக்க, அரவணைக்க தமிழக காங்கிரஸ் தலைமை தயாராக இருக்கிறது. இனியும் தமிழ் மாநில காங்கிரசில் நீடிப்பதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மே 23 ஆம் தேதிக்கு பிறகு மத்தியில் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு, இளம் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. அத்தகைய தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலக்க தமிழ் மாநில காங்கிரஸ் நண்பர்களே வாருங்கள், வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்.” கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

click me!