அதிமுகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி... டென்ஷனில் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published May 10, 2019, 11:52 AM IST
Highlights

அதிமுக அதிருப்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

அதிமுக அதிருப்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து  எம்.எல்.ஏ. 3 பேரிடமும் விளக்கம் கேட்டு தனபால் கடந்த 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தது. 

இந்நிலையில் நோட்டீசை எதிர்த்து ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சபாநாயருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சபாநாயகர், 2 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த தடை உத்தரவு பிரபுவுக்கு அனுப்பிய நோட்டீசுக்கும் பொருந்தும் என கூறப்பட்டது. இருந்தாலும், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்க மேலும் ஒருவாரம் அவகாசம் வேண்டும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் பிரபு எம்.எல்.ஏ. மனு அளித்தார். அதேநேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பிரபுவுக்கும் பொருந்தும் என்பதால், சபாநாயகர், நோட்டீசுக்கு, அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், சபாநாயகரின் நோட்டீசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது எம்.எல்.ஏ பிரபுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.  வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஏற்கனவே அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் வழக்கில் நோட்டீஸுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!