
வானதி சீனிவாசன் பேட்டி
கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நமது நாடு கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனால் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் உள்ளது. புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் கல்விக்காக மத்திய அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திமுக அரசு
குறிப்பாக ஆராய்ச்சி படிப்புகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு அதன் மூலம் அதிகளவு மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். திமுக சுயநல அரசியலுக்காக பிரதமர் மீதும் மத்திய அரசின் மீது தேவையில்லாத விமர்சனங்களை வைத்து தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள்.சுயநல அரசியலுக்காக நீட் எதிர்ப்பு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, புதிய மொழி கற்க எதிர்ப்பு என்று ஏழை குழந்தைகளின் வாழ்க்கையில் திமுக அரசு மண் அள்ளி போடுகிறது.
தமிழக பாஜக
குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 3-வது மொழியாக அவர்களின் விருப்ப மொழியை கற்கும் உரிமையை மாநில அரசு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இதனை கண்டு திமுக அமைச்சர்களுக்கு பதற்றம் வந்து விட்டது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் தமிழக பாஜக உறுதியாக இருக்கிறது. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி இரண்டு மாநில மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும்.
நாங்களும் அதனை வலியுறுத்துவோம். தமிழகத்தில் கந்துவட்டிக்காக ஏற்கனவே உள்ள சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்த வேண்டும். நூல் விலை உயர்வால் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தொழில் அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து மத்திய அரசு உடனடியாக அமைப்புகளுடன் பேசியதை அடுத்து விலை குறைந்தது. ஆனால் பதுக்கல் உள்ளதாக மாநில அரசு கூறுகிறது. அதனை மாநில அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று பேசினார்.
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!