வீட்டு வாடகைக்காக மாதம் 9 லட்சம் வாங்கும் அண்ணாமலை.. இதை அமலாக்கத்துறை விசாரிக்காதா.? கோவை செல்வராஜ் கேள்வி

By Ajmal KhanFirst Published Jun 19, 2023, 3:00 PM IST
Highlights

எடப்பாடி பழனிச்சாமி சொல்பவர் அந்த கட்சியில் வேட்பாளராக இருக்க முடியாது எனவும், பா.ஜ.க சொல்பவர்தான் அதிமுக வேட்பாளராக இருக்க முடியும் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை என்ன.?

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் திமுக தலைமை கழக  செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  அமலாக்க துறை கடந்த 9 ஆண்டுகளில் 3,117 பேர் மீது வழக்கு பதிவு செய்து 27 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், பா.ஜ.க தங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்க அமலாக்க முறையை பயன்படுத்துகிறது எனவும் குற்றம்சாட்டினார். இந்தியாவில் இருக்கும் எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார், இதன் காரணமாக நடாளுமன்ற தேர்தலில்  17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க  வெற்றி பெற முடியாது என்பதால் இப்போது செந்தில் பாலாஜியை கைது செய்து பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறினார். 

அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்குமா.?

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை எல்லாவற்றிக்கும் பதில் சொல்ல சிபிஐ அதிகாரியா? அமலாக்க துறை அதிகாரியா? என கேள்வி எழுப்பிய அவர் சிபிஐ, அமலாக்க துறை பற்றி பேசுவதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எனவும் கேள்வி எழுப்பினார். அண்ணாமலைக்கு  வீட்டு வாடகை, செலவிற்கு என நண்பர்களிடம் மாதம் 9 லட்சம் வாங்கி வருகின்றார், இதுவே இரண்டாண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை  பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது எனவும் இதை அமலாக்க துறை விசாரிக்காதா எனவும் கேள்வி எழுப்பினார். பணம் கொடுத்தற்கும், பணம் வாங்கியதற்கும்  வருமான வரியை அண்ணாமலையும், பணம் கொடுத்தவரும் தாக்கல் செய்துள்ளார்களா என்பதை மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும் எனவும், அமலாக்க துறை இதற்கு நடவடிக்கை எடுக்குமா எனவும் கேள்வி எழுப்பினார். 

ஆளுநரை பதவி நீக்கனும்

ஆருத்ரா நிதி நிறுவன வழக்கில் இருப்பவர்களிடம்,  பணம் வாங்கி கொண்டுதான் பா.ஜ.கவில்   கட்சி பதவி கொடுத்ததாக கைதானவர்கள் சொல்லி இருக்கின்றனர், இதற்கு பா.ஜ.க தலைமையும், அண்ணாமலையும் எந்த பதிலும் சொல்ல வில்லை எனவும் தெரிவித்தார். இந்திய அரசியல் அமைப்பு படி செயல் படாமல் , அதிகாரத்தை மீறி செயல்படுவதால் தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது எனவும் விமர்சித்தார்.

அதிமுகவில் 7 கோஷ்டி

எடப்பாடி பழனிச்சாமி சொல்பவர் அந்த கட்சியில் வேட்பாளராக இருக்க முடியாது எனவும், பா.ஜ.க சொல்பவர்தான் அதிமுக வேட்பாளராக இருக்க முடியும் எனவும், தங்கமணி வேலுமணி தனி கோஷ்டி, சி.வி சண்முகம் ஒரு கோஷ்டி என அதிமுக இப்போது  7 கோஷ்டியாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். அதிமுக கட்சி தலைவர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என இழிவுபடுத்தியவர்களுடன் இன்னும் அதிமுக கூட்டணியில் இருப்பது ஏன் என கோவை செல்வராஜ் விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த முடியாமல் தவிக்கும் அமலாக்கத்துறை.!அடுத்த கட்ட திட்டத்திற்கு தயாரான பிளான்?

click me!