வழக்கை சந்தித்தே ரஜினிக்கு வயசாகி போயிடும் போல... அனைத்து காவல் நிலையத்திலும் புகார் கொடுக்க அழைக்கும் கொளத்தூர் மணி....!!

By Ezhilarasan BabuFirst Published Jan 17, 2020, 12:04 PM IST
Highlights

பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என  பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம்.

ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்- என திராவிடர் விடுதலைக்கழகத்தில் தலைவர்  கொளத்தூர் மணி அறிக்கை விடுத்துள்ளார் அதன் விவரம் :- 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பேரணியில் இராமன் சீதை ஆகியோர்  உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர்  இரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் . என்று வலியுறுத்துகிறோம். 

அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு 
வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும்  நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும்  உடனடியாக புகார்  கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு  அனைவரும் தயாராக இருப்போமாக! கொளத்தூர் மணி அறைகூவல் விடுத்துள்ளார்...
 

click me!