
கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரி அதிமுக தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் தமிழக அரசை கடுமையாக வசைப்பாடி வருகிறார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாகவும் பேசி வருகிறார்.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைத் தொடர்புபடுத்திப் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதேபோல் இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்புபடுத்திப் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.