
சிங்கப்பூரில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் செய்து கொண்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததே கேப்டன் உடல் நிலை இப்படி மோசமானதற்கு காரணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக விஜயகாந்த் சிங்கப்பூருக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை எடுத்துக் கொண்டது பின்னரே தெரியவந்தது. சிகிச்சை முடிந்து சில நாட்கள் சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர் வீட்டிலும் விஜயகாந்த் ஓய்வில் இருந்தார். அதன் பிறகு விஜயகாந்த் சென்னை திரும்பியது கூட மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய விஜயகாந்தை, ஸ்ட்ரச்சர் சேரில் உட்கார வைத்து முகத்தை மஃப்ளரால் மறைத்து அவரது கார் ஓட்டுனர் அழைத்துச் சென்று இருந்தார். அதன் பிறகு சுமார் 15 நாட்கள் வெளியில் தலைகாட்டாத கேப்டன் நாடாளுமன்ற பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இருந்தார். இந்த நிலையில் தான் கேப்டனின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது. முதலில் கேப்டனின் குரலில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. மிகவும் கஷ்டப்பட்டு கேப்டன் பேசத் தொடங்கினார். அதன் பிறகு நீண்ட நேரம் பேச முடியாமல் கேப்டன் தவிக்க நேரிட்டது. இதனை தொடர்ந்து கேப்டனால் நின்று கொண்டு பேச முடியாத நிலை உருவானது. இப்படியாக கேப்டன் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், அமெரிக்காவுக்கு குடும்பத்தினர் அண்மையில் அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்கும் கேப்டனுக்கு சிகிச்சையை தொடர முடியாத நிலை ஏற்பபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே கேப்டன் சென்னை அழைத்துவரப்பட்டார். அப்போது தான் கேப்டன் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவின் முழு வீச்சு தெரிய ஆரம்பித்தது. கலைஞர் நினைவிடத்திற்கு கால்கள் தடுமாற ஒரு குழந்தையை போல் நடந்து வந்த கேப்டன் நிலையை பார்த்து தமிழகமே கண்ணீர் வடித்தது. சிங்கம் போல் நடந்து வந்த கேப்டனுக்கா இந்த நிலை என்று அவரது கட்சித் தொண்டர்கள் மட்டும் அல்ல அனைவருமே அனுதாபப்பட்டனர்.
இந்த நிலையில் திடீரென கடந்த வெள்ளியன்று கேப்டன் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அவரது மகன் விஜய பிரபாகரன் மறுத்து வீடியோ வெளியிட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்து கேப்டன் வீடு திரும்பிவிட்டார். ஆனாலும் கேப்டன் உடல்நிலை அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியது போலவே உள்ளது. இதற்கு காரணம் விசாரித்த போது தான் சிங்கப்பூரில் கேப்டனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற தகவல் தெரியவந்தது. மேலும் அங்கு நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தராததே பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் துரதிஷ்டவசமாக கேப்டனுக்கு அங்கு சிகிச்சையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததே அவரது உடல்நிலை தற்போது இப்படி ஆனதற்கு காரணமாகியுள்ளது. இதனை சரி செய்யவே அமெரிக்காவிற்கு கேப்டனை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற பரிசோதனைகளை தொடர்ந்து மாற்றப்பட்ட சிறுநீரகம் என்பதால் சிகிச்சையை தொடங்கு அமெரிக்க மருத்துவமனை தயங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் கேப்டன் சிகிச்சை தொடங்காத நிலையிலேயே சென்னை திரும்பியுள்ளார். அதே சமயம் அமெரிக்காவில் மேலும் மருத்துவமனைகளிடம் கேப்டன் குடும்பத்தார் தொடர்ந்து பேசி வருகின்றனர். விரைவில் அவர் மீண்டும் அமெரிக்காவிற்கு புறப்பட்டு அங்கு சிகிச்சை முடிந்து பழைய விஜயகாந்தாக திரும்பி வருவார் என்று அவரது கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.