
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய கேரள முதல்வர் பினராயி விஜயன் நாளை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 22ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட், சென்னை வந்து சிகிச்சை அளித்தார். இதை தொடர்ந்து, டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ள அவர், தற்போது, நலமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தினமும் அறிக்கையில் தெரிவித்து வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவை, கவர்னர் வித்யாசாகர் ராவ், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர், நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, கேரள முதல்வர் பினராயி விஜயன். நாளை சென்னை வர இருக்கிறார். அப்போது, அவருடன் கேரள முக்கிய அமைச்சர்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.