சபரிமலை அய்யப்பனை மனமுருக பாடிய சுசீலாவிக்கு கேரள அரசு விருது !!

By Selvanayagam PFirst Published Jan 9, 2019, 7:58 AM IST
Highlights

சபரிமலை அய்யப்பனை பற்றிய சிறப்புகளை பரப்பும் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அரிவராசனம் விருதை இந்த ஆண்டு பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பெறுகிறார். என கேரள அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மாலை மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 11-ந் தேதி பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நடைபெறுகிறது. மேலும் மகரவிளக்கு பூஜை அன்று சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலமாக 14-ந் தேதி சன்னிதானத்திற்கு எடுத்துவரப்படும்.

இந்த ஆபரணங்களை சுவாமி அய்யப்பனுக்கு அணிவித்து தீபாராதனை காட்டி மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதே சமயம் அங்குள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

மகரவிளக்கு பூஜை காலத்தில் கேரள அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் பற்றிய சிறப்புகளை பரப்பும் கலைஞர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அரிவராசனம் விருது வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. விருதுபெறும் கலைஞருக்கு ரூ.1 லட்சம் பரிசும் கிடைக்கும்.

இந்த தகவலை கேரள தேவசம்போர்டு அமைச்சர்  கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு அரிவராசனம் விருதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் போன்றோரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!