அரசின் கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம்.. அதிமுகவின் இழிநிலை என வைகோ வேதனை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 28, 2020, 11:07 AM IST
Highlights

பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கல்வி தொலைக்காட்சியில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி உடை தரித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் இழி செயலில்  பள்ளிக் கல்வித் துறையும் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

அரசின் கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: பழனிச்சாமி அரசு, இந்துத்துவ சனாதன சக்திகளின் கைப்பாவையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரின் தலையீட்டீற்கு ஆதரவு வழங்கி வரும் அதி.மு.க. அரசு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராயின் நூலின் ஒரு பகுதியை அகற்றியது. 

சென்னை பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தத் துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணனை துறைத் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்ற சங் பரிவார் முயற்சி மேற்கொண்டது. அதை ஏற்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை பாடமாக வைக்கவும், சமஸ்கிருத மொழியைத் திணிக்கவும் துணைவேந்தர் சூரப்பா முயன்றபோது, எடப்பாடி பழனிச்சாமி அரசு வேடிக்கை பார்த்தது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்புக்கும், சமஸ்கிருதமயமாக்கலுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வெண்சாமரம் வீசி வருகின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் இந்துத்துவ சனாதனக் கும்பலுக்கு துணைபோய் இருக்கின்றது. 

பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கல்வி தொலைக்காட்சியில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி உடை தரித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் இழி செயலில்  பள்ளிக் கல்வித் துறையும் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மனித சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவருக்கு, பிறப்பினில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மனுநீதிக் கும்பல் காவி வண்ணம் பூசுவதை இன உணர்வு கொண்ட தமிழ் மக்கள் சகிக்க முடியாது. உடனடியாக தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!