ஜம்மு காஷ்மீர் சட்டமேலவை கலைப்பு ! ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நிர்வாகம் …

By Selvanayagam PFirst Published Oct 17, 2019, 9:05 PM IST
Highlights

62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்ட மேலவையைக் கலைத்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் யூனியன் பிரதேசமாகவும் மாற்றி உத்தரவிட்டது.யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் உத்தரவு வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது சட்டப்பேரவையும், சட்டமேலவையும் செயல்பட்டு வருகிறது. ஆனால், வரும் 31-ம் தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டால், அங்கு சட்ட மேலவை தேவையில்லை. சட்ட மேலவை செயல்படாது.

யூனியன் பிரதேசமாக மாறும் அறிவிப்பு இன்னும் இரு வாரங்களில் செயல்பாட்டுக்கு வர இருக்கும் நிலையில், சட்ட மேலவையைக் கலைத்து நேற்று நள்ளிரவு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் செயலாளர் பரூக் அகமது லோன், பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019, பிரிவு 57-ன் படி, ஜம்மு காஷ்மீர் மேலவை கலைக்கப்படுகிறது.

வரும் 22-ம் தேதிக்குள் மேலவையில் உள்ள 116 ஊழியர்கள் பொது நிர்வாகத்துறையிடம் நேரில் ஆஜராகி தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். அரசு நிர்வாகத்துக்காக வாங்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் மாநில மோட்டார் பாதுகாப்பு இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும், கட்டிடங்கள், பர்னிச்சர்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை எஸ்டேட் இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!