உள்ளிருப்பு போராட்டம் ..வாபஸ்.. ஜோதிமணியின் பரபரப்பு நிமிடங்கள்..

Published : Nov 26, 2021, 04:24 PM IST
உள்ளிருப்பு போராட்டம் ..வாபஸ்.. ஜோதிமணியின் பரபரப்பு நிமிடங்கள்..

சுருக்கம்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்த வலியுறுத்தி , எம்.பி ஜோதிமணி தொடர்ந்து 2 வது நாளாக ஆட்சியருக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் , தற்போது போராட்டத்தினை வாபஸ் பெற்றுள்ளார். மேலும் மாற்றுதிறனாளிகளுக்கான ADIPஎனும் முகாம் நடத்த உத்தரவாதம் கொடுக்கப்பட்டதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

கரூரில் மாற்றுதிறனாளிகளுக்கு முகாம் நடத்த பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி எம்.பி தர்ணாவில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளாதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் , ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதியவர்கள் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்துகொண்டு மருத்துவ சான்று பெற்று அவர்களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என கூறினார். மேலும் கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது, உதவி உபகரணங்கள் பெறுவது, சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர வண்டி, ஊன்றுகோல் கருவி, செயற்கை கால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் பிற உதவிகள் இந்த முகாமில் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இந்த முகாமை ஒவ்வொரு இடத்திலும் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அவர் முகாமை நடத்த மறுத்து விட்டார். பிற மாவட்ட கலெக்டர்கள் இந்த முகாமை நடத்த ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், கரூர் மாவட்ட கலெக்டர் இதற்கு மறுத்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் , மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அதற்கான தேதியை வழங்கும் வரையில் இந்த போராட்டத்தை தொடர்வேன் என்றும் ஜோதிமணி கூறினார். மேலும் அவர் ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன் எனவும் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை? என கேள்வியெழுப்பிள்ளார். மேலும் இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்தியுள்ளார் என கூறிய அவர் கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது? என கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில் ஆளுங்கச்சியுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி சேர்ந்தவர் ஜோதிமணி . தான் நினைத்தால் மேலிடத்தில் பேசி இந்த முகாமை கரூர் மாவட்டத்தில் நடத்திருக்கலாம். ஆனால் தன்னுடைய மீடியா வெளிச்சத்திற்காக இந்த மாதிரி போராட்டத்தில் குதித்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்று  தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை நேரில் சந்தித்த மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அவரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க விரைவில் முகாம் நடக்கும் என உறுதி தந்தார். இதையடுத்து, இரண்டாவது நாளாக நடத்திய தர்ணா போராட்டத்தை ஜோதிமணி எம்.பி. வாபஸ் பெற்றுக்கொண்டார்

இதுகுறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'ADIP' முகாம் நடத்தப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் என்னோடு துணைநின்ற கரூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், ஊடக நண்பர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!