“கலைஞரின் சாதனை இம்மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர், துணை முதல்வர் புகழாரம் சூட்டினர். ஓபிஎஸ் இபிஎஸ் கட்டுரை அப்படியே கருணாநிதியால் தொடங்கப்பட்ட திமுகவின் பத்திரிகையான முரசொலியில் வெளிவந்திருக்கிறது.
2019 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், வரும் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத் தொடரின் நேற்று முன்னாள் முதல்வர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண சிங், விவசாய ஆர்வலர் நெல் ஜெயராமன், மறைந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “கலைஞர் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அயராது உழைத்த அவர், இன்று நம்மிடையே இல்லை. பல பதவிகளை வகித்தவர், அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர். சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர் சமூக நீதிக்காகப் போராடியவர். மனஉறுதியாளர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், தனது அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர். அரசியல் மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கலைஞர்” என்று புகழாரம் சூட்டினார்.
“அண்ணாவின் அன்புத் தம்பியான கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. தனது உடன்பிறப்புகளுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை அவர் எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்ட பன்னீர்செல்வம், பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் என்று முரசொலியில் கலைஞர் எழுதியதையும் நினைவுகூர்ந்தார். அரசியல் எல்லைகளைக் கடந்து கலைஞர் மீது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அன்பு கொண்டிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் இரங்கல் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பேசிய போது, “இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் திரு.கலைஞர். 13 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றியவர், 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் ஆனார். எழுத்து,இலக்கியம்,திரைத்துறை என அனைத்திலும் சிறந்து விளங்கியவர், பன்முக தன்மை கொண்டவர். திரு.கலைஞர் பன்முகத்தன்மையால் சமூக விழிப்புணர்வை தன்னுடைய எழுத்தின் மூலமாக ஏற்படுத்தியவர். பராசக்தி படம் மூலம் தன்னை பகுத்தறிவாளர் என்பதை உலகிற்கு உணர்த்தினார். தமிழ் மொழிக்காக திரு.கலைஞர் ஆற்றிய தொண்டு மகத்தானது. ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரிய திரு.கலைஞர் தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை அளித்தவர். சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்த திரு.கலைஞரை அதிமுகவும் சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது, தேவையெனில் எதிர்த்து உள்ளது. தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வென்றவர். அவருடைய மறைவிற்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். திரு.கலைஞர்ன் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று திரு.கலைஞர்க்கு சட்டப்பேரவையில் முதல்வர் புகழாரம் சூட்டினார்.மேலும் குறிப்பாக முதல்வர் கருணாநிதி என்று அழைக்காமல், அவர் பெயர் வரும் இடத்தில் எல்லாம் திரு.கலைஞர் அவர்கள் என குறிப்பிட்டு பேசினார்.
மேலும் சபாநாயகர் தனபால், 1977-ம் ஆண்டு எம்.எல்.ஏ.யாக வந்த காலத்திலிருந்து முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை நான் நேரிலே, அருகிலே இருந்து பார்த்து, அவருடைய தமிழை கேட்கிற பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சட்டசபைக்கு வந்ததற்கு பின்னால், தொடர்ந்து நான் 3 முறை எம்.எல்.ஏ.யாக இருந்த காலத்தில், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இந்த மன்றத்திலே இருந்து பணியாற்றியதை நான் நினைத்து பார்க்கிறேன். அவரின் சட்டமன்ற நடவடிக்கைகளை நான் பார்த்து இருக்கிறேன்.
பேரவையிலே விவாதம் நடக்கையிலே அவர் சிறப்பாக உரையாற்றுவார். திரைப்படத்துறை, இலக்கியத்துறை, அரசியல் துறை என முத்துறையிலும் சிறப்பாக பணியாற்றி, ‘கலைஞர்’ என்று அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டவர். அவரை இழந்து வாடுகிற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவருடைய தொண்டர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை இந்த அவையிலே உங்களுடைய கருத்துகளோடு இணைத்து தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இலக்கியம், நாடகம் கவிதை என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர், அரசியலில் தனி முத்திரை பதித்தவர் கருணாநிதி என்ற தலைப்பில் முரசொலியில் முதல் பக்கத்திலேயே கட்டுரை வெளியாகியிருக்கிறது.
ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களை கண்ட கலைஞரின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் என புகழாரம் சூட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உரையை அப்படியே முரசொலியில் வெளியாகியுள்ளது.
முதல்வர்களின் முந்தைய அரசியலை தாறுமாறாய் கிழித்த இதே முரசொலில் அவர்களின் இந்த திடீர் பண்புக்கு பின்னணி, முன்னணி என்று சாயம் பூசாமல், அதை அப்படியே வெளியிட்டுள்ளது!