
திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்சிதாவுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார்.
மு.க.முத்து மகள் வழி பேரன் மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம் மகள் அக்சிதாவுக்கும் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி இன்று நடத்த வைத்தார்.
அரசியலிலும், பத்திரிகை துறையிலும் முத்திரை பதித்தவர் கருணாநிதி. தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராகிய பணியாற்றியவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பிய கருணாநிதி, கோபாலபரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இம்மாதம் 19 ஆம் தேதி, முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வருகை தந்தார். அவருடன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் மகள் செல்வி, பொன்முடி, எ.வ. வேலு உள்ளிட்ட பலர் உடன் வந்தனர்.
முரசொலி அலுவலக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது மெழுகு சிலையை கருணாநிதி மிகவும் ஆர்வத்துடன் ரசித்தார். அப்போது கருணாநிதி, தன்னுடைய கைகளை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். கருணாநிதியின் இந்த வருகையால், திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த நிலையில், மு.க.முத்துவின் மகள் வழி பேரனும் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுமான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும், சென்னை கோபாலபுரத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். பின்னர், மணமக்கள் மனுரஞ்சித்தும், அக்சிதாவும், கருணாநிதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.