
ப.சிதம்பம் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின்போது எந்தவித ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகள் சும்மாவே அமர்ந்திருந்ததாகவும், கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் வீட்டில் தான் அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியிலிருந்து ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
2006 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ப.சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அது தொடர்பாக இன்று மீண்டும் ப.சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, காரைக்குடி மற்றும் டெல்லி உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குநரின் உத்தரவின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அமலாக்கத்துறை சோதனையின்போது எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றார். காலை 7.30 மணி முதல் சோதனை நடத்தப்பட்டு வந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சும்மாவே அமர்ந்திருந்தனர்.
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடமும் எந்த வித விசாரணையும் நடத்தப்படவில்லை என்று வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறினார். அருண் நடராஜனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். ஆனால், செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்ப்பதாகவே அருண் நடராஜன் பதிலளித்தார்.