என்றைக்காவது இவர்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளீர்களா? ஸ்டாலினுக்கு கார்த்தி ப.சிதம்பரம் அதிரடி கேள்வி..!

By Selva KathirFirst Published Nov 27, 2020, 12:50 PM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தாங்கள் எந்தவிதத்திலும் தலையிட முடியாது என்று சிபிஐ கூறிவிட்ட நிலையில் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தாங்கள் எந்தவிதத்திலும் தலையிட முடியாது என்று சிபிஐ கூறிவிட்ட நிலையில் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை கடந்த காலங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் ஆயுள் தண்டனை கைதிகள் என்றால் அவர்களின் நடத்தையின் அடிப்படையில் 14 வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அமைச்சரவையும் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பியுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் உள்ளார். இந்த நிலையில் இது மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐ தொடர்புடைய அமைப்பு எனவே ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தான் இறுதி முடிவெடுக்க முடியும் என்று சிலர் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ஏழுபேர் விடுதலை விவகாரத்தில் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. வழக்கை நடத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன் தங்கள் பணி முடிந்துவிட்டதாவும் இந்த விவகாரத்தில் தற்போது அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஆளுநர் தான் என்று கூறியுள்ளது சிபிஐ. இதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை பயன்படுத்தி ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரியுள்ளார். ஸ்டாலின் இப்படி ஆளுநரை சந்தித்து கோரிக்கைவிடுத்துவிட்டு வந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களை சட்ட ரீதியாக விடுவிக்க வழியிருந்தால் விடுவிக்கலாம்.

ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்டவர்களை ஹீரோக்கள் ஆக்க கூடாது. அதே நேரத்தில் ராஜீவ் காந்தியுடன் கொலையானவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள், ராஜீவ் காந்தியுடன் கொலையான தர்மன், சாந்தணிபேகம், ராஜகுரு, சந்திரா, எட்வர்ட், ஜோசப், முகமது இக்பால், லதா கண்ணன், ஜுட் பீட்டர்ஸ், கோகிலவாணி, முனுசாமி, சரோஜா தேவி, பிரதீப் ஆகியோரின் குடும்பத்தினருக்கு என்றைக்காவது குரல் கொடுத்து இருக்கிறார்களா? என்று அந்த ட்வீட்டில் கார்த்தி சிதம்பரம் கேட்டுள்ளார்.

அதாவது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து பேசிவிட்டு திரும்பிய நிலையில் கார்த்தி சிதம்பரம் இந்த ட்வீட் போட்டுள்ளார். அதாவது பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், ராஜீவ் காந்தியோடு கொலையானவர்களின் குடும்பத்தினருக்காக என்றாவது குரல் கொடுத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கார்த்தி சிதம்பரம். ஏற்கனவே தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் – திமுக இடையே பனிப்போர் நிலவி வருகீறது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக கேள்வி கேட்டு கார்த்தி பசிதம்பரம் ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!