கன்னியாகுமரி எம்பி தொகுதி இடைத்தேர்தல்.. திமுக எடுத்த முடிவு.. நிம்மதிப் பெருமூச்சு விட்ட காங்கிரஸ்..!

By Selva KathirFirst Published Nov 27, 2020, 12:38 PM IST
Highlights

சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் திமுக எடுத்துள்ள முடிவு காங்கிரசை நிம்மதி அடைய வைத்துள்ளது.

சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் திமுக எடுத்துள்ள முடிவு காங்கிரசை நிம்மதி அடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் வசந்தகுமார். பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி வெற்றி பெற்ற வசந்தகுமார் அண்மையில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்தார். இதனை அடுத்து கன்னியாகுமரி எம்பி தொகுதி காலியாகியுள்ளது. தற்போது கொரோனாவை காரணம் காட்டி அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அதே சமயம் சட்டப்பேரவை தேர்தலோடு சேர்த்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அங்கு திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு வந்தது. இதனால் தான் கடந்த 2019ல் கன்னியாகுமரியை காங்கிரசுக்கு கொடுத்தது திமுக. இந்த நிலையில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அதை விட்டுக் கொடுக்குமா என்கிற கேள்வி எழுந்தது. ஏனென்றால் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இருந்தாலும் அவர்கள் கேட்கும் தொகுதியை கொடுக்கப்போவதில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

அதே போல் நாங்குநேரி தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியை திமுகவிடம் பிடிவாதம் காட்டி காங்கிரஸ் வாங்கியது. ஆனால் அங்கு அதிமுக வேட்பாளரிடம் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அங்கு திமுக போட்டியிட்டிருந்தால் கூட அதிமுக வேட்பாளருக்கு டப் கொடுத்திருக்கலாம் என்று பேச்சுகள் எழுந்தன. தேவையில்லாமல் ஒரு தொகுதியை திமுக மிஸ் செய்துவிட்டதாகவும் பேச்சுகள் எழுந்தன. அதே சமயம் கடந்த காலங்களில் கன்னியாகுமரி தொகுதியில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

எனவே கன்னியாகுமரி தொகுதியை திமுக தங்களுக்கு விட்டுத் தருமா என்கிற ஒரு சந்தேகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்து வந்தனர். இருந்தாலும் கூட அங்கு போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், ஏற்கனவே அந்த தொகுதியின் மீத கண்ணாக இருக்கும் ரூபி மனோகரன், தற்போது எம்எல்ஏவாக இருக்கும் விஜயதாரணி போன்றோர் கன்னியாகுமரி எம்பி கனவில் உள்ளனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கன்னியாகுமரி எம்பி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான பேச்சு எழுந்துள்ளது. அதற்கு சட்டமன்ற தேர்தலில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதும் கன்னியாகுமரி எம்பி பதவி நமக்கு முக்கியம் இல்லை என்று ஸ்டாலின் கூறியதாக சொல்கிறார்கள். மேலும் அது காங்கிரசின் சிட்டிங் தொகுதி என்பதால் அதை அவர்களுக்கே கொடுத்துவிடலாம் என்கிற ரீதியில் ஸ்டாலின் பேசியதாக கூறுகிறார்கள். இந்த தகவல் கசிந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

ஆனால் கன்னியாகுமரி தொகுதியை விட்டுக் கொடுப்பது போல் கொடுத்து அதற்கு ஈடாக சுமார் 6 சட்டமன்ற தொகுதிகளை திமுக காங்கிரசுக்கு கொடுக்காமல் திமுக வேட்பாளர்களை நிறுத்திவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

click me!