நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!! பாஜகவிற்கு சவுக்கடி

First Published May 18, 2018, 11:44 AM IST
Highlights
karnataka floor test should be conduct on tomorrow evening ordered sc


நாளை மாலை 4 மணிக்கே கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை கொண்ட பாஜகவின் சார்பில் எடியூரப்பாவிற்கு ஆளுநர், முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் கொடுத்திருந்தார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், அந்த கூட்டணி 115 எம்.எல்.ஏக்களை(குமாரசாமி இரண்டு இடங்களில் வென்றுள்ளதால் ஒரு இடம் காலியாகும்) கொண்டுள்ளது. எனவே 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுள்ள தங்களை ஆட்சியமைக்க மஜத தலைவர் குமாரசாமி ஆளுநரிடம் உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்ததால், அதை எதிர்த்து காங்கிரஸ்-மஜத சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது, ஆட்சியமைத்துள்ள பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது என்றால், நாளையே ஏன் பெரும்பான்மையை நிரூபிக்க கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அப்படி இல்லையென்றால், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

ஆனால், நாளைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது எனவும் போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடினார்.

ஆனால், முகுல் ரோஹத்கியின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். 

பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே குதிரை பேரத்தை தடுப்பதற்காக, காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவிற்கு 104 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் 28 மணி நேரமே உள்ளது. 
 

click me!