இன்னொரு அணை எக்ஸ்ட்ராவா இருந்திருந்தா தண்ணீர் வீணா கடலுக்கு போகாம தடுத்திருக்கலாம்… மேகதாதுவில் அணை கட்ட அடிப்போடும் குமாரசாமி !!  

First Published Jul 23, 2018, 11:51 AM IST
Highlights
Karnataka cm try to built dam in Magdadu newar Hosur


கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பருவமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கே மேட்டூர் அணையும் நிரம்பியுள்ளதால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கலக்கிறது. இதைத் தடுக்கும் விதமாக மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அனுமதி கேட்கப் போவதாகவும் கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே  ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய பங்கை சரியாக திறந்து விடுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மழை அதிகமாக பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து தமிழகத்துக்குரிய பங்கைப் பெறுவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பல கட்ட சட்டப் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் போன்றவை காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அண்மையில் அமைக்கப்பட்டது.

ஏற்கனவே காவிரி நீரைப் பிரித்துக் கொள்வதில் இரு மாநிலங்களுக்கிடையே பஞ்சாயத்து இருந்து வரும் நிலையில் காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த அணையை 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டது.  அப்படி கட்டப்பட்டால்  கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரியதாக இருக்கும். அதாவது அதில் 67 டிஎம்சி தண்ணீர் வரை தேக்கிவைக்கப்படும்.

ஆனால் மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுவிடும் என்ற அச்சம் இங்கே நிலவி வருகிறது. ஏற்கனவே உள்ள அணைகளில் இருந்தே  தமிழகத்திற்கு சேர வேண்டிய தணிணீர் முறையாக திறந்துவிடப்படுவதில்லை. அப்படி இருக்கையில் புதிய அணை கட்டினால் வருகிற தண்ணீரும் நின்றுவிடும் என்ற பயம் தமிழகத்தில் இருக்கிறது.



இதன் காரணமாக மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. கட்டுமான பணிகளை நடத்த முடியாமல் கர்நாடகா உள்ளது.

தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணை இன்று நிரம்பியது. அணைக்கு  80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்படும். மேட்டூருக்கு பிறகு காவிரியில் தண்ணீர் தேக்கி வைப்பதற்கு அணை இல்லை. இதனால் பெருமளவு தண்ணீர் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதலமைச்சர்  குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. அணை நிரம்ப போகிறது. கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து தண்ணீர் செல்லும் பவானி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இரு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அதிக அளவில் இருக்கும் என்பதால் அந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது வீணாகும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு மேகதாது ஆணை பொருத்தமாக இருக்கும். அவ்வாறு அணை கட்டினால் அதில் தண்ணீர் தேக்கி வைத்து கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பெங்களூருக்கு அனுப்ப முடியும். மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்திற்கும் தேவைப்படும் காலங்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கும் வசதியாக இருக்கும். எனவே இதற்கு தமிழகம் அனுமதிக்க வேண்டும் என குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்..



இதற்காக குமாரசாமி தமிழகத்தில் உள்ள  அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச உள்ளதாகவும், விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசு உள்ளதாகவும் தெரிவித்துள்ள குமாரசாமி, காவிரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கு இதுதான் ஒரே வழி. இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழகத்தை கேட்டுக் கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்..

தான்  விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், விவசாயிகள் கஷ்டம் தனக்கு தெரியும் என்றும்,  மேகதாது அணை மூலம் இன்னும் தமிழக விவசாயிகளுக்கு அதிகமாக எங்களால் உதவ முடியும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்..

click me!