
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு செய்ய முக்கிய தலைவர்களுக்கு டீ பார்ட்டிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி.கலந்து கொள்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்கள் என பலர் நிறுத்தப்படுவார்கள் என தெரிகிறது.
இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக பாஜகவுக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைத்து, புதிய அணியை உருவாக்க காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் , தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று முக்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா விருந்தளிக்க உள்ளார். பா.ஜ.,வுக்கு எதிராக தங்களின் பலத்தை காட்டுவதற்காகவும் சோனியா இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விருந்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் சீதாராம் யெச்சூரி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் , திமுக சார்பில் கனிமொழி எம்.பி.உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தை பிஹார் முதலமைச்சர் நிதீஷ்குமார் புறக்கணித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.