நேரடியாக தேர்தலில் களம் இறங்கும் கனிமொழி !! தங்கைக்கு அண்ணன் ஸ்டாலினின் அன்புப் பரிசு !!

By Selvanayagam PFirst Published Jan 19, 2019, 7:09 AM IST
Highlights

திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் நிலையில் எதிர்வரும் தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கைக்கு அண்ணன் ஸ்டாலின் இதனை அன்புப்பரிசாக வழங்குவதாகவும், தற்போது அந்தத் தொகுதியில் கனிமொழி போட்டியிட தயாராகி வருவதாகவும் தெரிகிறது.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி பலமுறை மாநிலங்களவை உறுப்பினாக பணியாற்றி வருகிறார். ஆனால் ஒரு முறை கூட நேரடியாக அவர் தேர்தல் களத்தை சந்தித்ததில்லை.

இந்நிலையில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி களம் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை கனிமொழி ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

கன்மொழி தனது எம்.பி. நிதியில் இருந்து ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அந்த கிராமம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள வெங்கடேசபுரம். அது மட்டுமல்லாமல் தூத்துக்குடிக்கு மாதம் ஒருமுறையாவது அவர் சென்று தொண்டர்களையும், பொது மக்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கனிமொழி கலந்துகொண்டு  மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஆழ்வார் திருநகர், கருங்குளம், தூத்துக்குடி ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்கிறார். 27ஆம் தேதி வரை இக்கூட்டங்களில் கனிமொழி கலந்துகொள்ள உள்ளார். மொத்தம் 12 நாட்கள் கனிமொழி தூத்துக்குடியில் தங்கி இந்தக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.

கனிமொழியின் இந்த தொடர் நடவடிக்கைகள் அவர் தூத்துககுடி தொகுதியில் போட்டியிடப் போவதை உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

click me!