விளைவுகள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும்... எச்சரிக்கும் மநீம தலைவர் கமல் ஹாசன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2021, 10:55 AM IST
Highlights

திரைப்பட சட்ட திருத்த மசோதாவின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால் அதனை எதிர்க்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவிற்கு எதிராக இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ள நிலையில், தொடர்ந்து கோலிவுட் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் தங்களுடைய எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். 


அதேபோல் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் திரைப்பட சட்ட திருத்த மசோதாவின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால் அதனை எதிர்க்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட ஒலிப்பதிவாளர் சங்க தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை வடபழனியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் ஹாசன், மோசமான ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதா அமலானால், ஏற்கனவே வெளியான படங்களைக் கூட மறுதணிக்கை மூலம் தடை செய்ய முடியும் என்றார். இந்த சட்டம் அமலாக்கப்பட்டால் ஏற்கனவே வெளியான தன்னுடைய விஸ்வரூபம் படத்தை கூட எங்கும் திரையிடக்கூடாது என மத்திய அரசால் தடை விதிக்க முடியும் என தெரிவித்தார். 

click me!