
தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் காயமடைந்தவர்களை இன்று காலை பார்த்து ஆறுதல் சொன்ன மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பெங்களூருவில் குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது அகில இந்திய அளவிலான கட்சித் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது 12 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இவர்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தடையை மீறி சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இதைத் தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற குமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது குமாரசாமிக்கு கமல் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை கமல் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து , கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜா, உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை கமல்ஹாசன் தனித்தனியாக சந்தித்து பேசினார்..
இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன், பாஜகவைத் தவிர கிட்டத்ததட்ட அகில இந்திய அளவிலான அனைத்துக்கட்சித் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
அரசியல்வாதிகளிடையே இந்தியாவில் பிரபல நடிகராக மட்டுமே அறியப்பட்ட கமல்ஹாசன், தற்போது புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இன்று அனைத்துத் தலைவர்களிடமும் ஒரு அரசியல்வாதியாக அறிமுகமாகியுள்ளார்.
அதுவும் இன்றை விழாவில் கமல்ஹாசனுக்கு புதிய அரசியல்வாதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.
தேர்தலின்போது மூன்றாவது அணியில் சேரும் ஐடியா கமலஹாசனுக்கு இருப்பதாக அரசியல் பார்வையாளர் கருதுகின்றனர்.