2024 டார்கெட்! ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்.. அப்போ திமுக + காங்கிரஸ் + மநீம கூட்டணி கன்ஃபார்ம்!

By Raghupati RFirst Published Dec 18, 2022, 5:16 PM IST
Highlights

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் அவருடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

2018ம் ஆண்டு மதுரையில் பிரம்மாண்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி கட்சியை தொடங்கினார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எந்த தொகுதியிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. இருந்தும் பல்வேறு தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்ததால், சட்டமன்றத் தேர்தலில் ஆர்வமாக அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த முறை நடிகர் கமல்ஹாசனும் நேரடியாக தேர்தல் களமிறங்கினார். கோவை தெற்கில் போட்டியிட்ட அவர், 2ம் இடத்தை பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டே, விக்ரம், இந்தியா - 2 உள்ளிட்ட படங்களில் நடிக்க தொடங்கினார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கள அரசியலில் ஈடுபடவில்லை. வெறும் அறிக்கைகள், ட்விட்டர் மூலமாக மட்டுமே மக்கள் நீதி மய்யம் அரசியலில் இருந்ததாக பார்க்கப்பட்டது. தற்போது வரை ட்விட்டர் அரசியல் தான் மக்கள் நீதி மய்யம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டை வைக்கின்றனர் மற்ற கட்சியினர்.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு, படு ஆக்டிவாக மாறிவிட்டார் கமல்ஹாசன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் இணைந்து படத்தயாரிப்பு, பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 என படு பிசியாக மாறிவிட்டார் உலகநாயகன். சினிமாவில் பிஸியானால் மட்டும் போதுமா என்ற கேள்வி மக்கள் நீதி மய்யத்தில் எழக்கூடாது என்ற நோக்கத்தில் அதிரடியாக பல்வேறு நடவிகைகளை எடுத்துள்ளார் கமல்ஹாசன்.

இதையும் படிங்க..சொத்து பட்டியலை வெளியிட தயார்! வேலியில் போகிற ஓணானை.. அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்,  நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன்  அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் அவருடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார்.

இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  இதுகுறித்து பேசிய க்கள் நீதி மய்யம் கட்சித் துணைத் தலைவர் மவுரியா, ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று பாரத் ஜோடோ யாத்ராவில் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார். ஜனநாயகத்தை காக்க ராகுலின் நடைபயணத்தில் அவர் கலந்து கொள்கிறார் என்று கூறினார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கட்சி தலைவர் பங்கேற்க இருப்பது கூட்டணி முடிவாக இருக்கக் கூடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம் என்ற கூட்டணிக்கு அச்சாரமாக இது இருக்குமோ என்ற கேள்வியும் தற்போது எழுந்து உள்ளது.

இதையும் படிங்க..டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ

click me!