சம்பா சாகுபடிக்காக இன்று கல்லணை திறப்பு !! மகிழ்ச்சியில் விவசாயிகள் !!

By Selvanayagam PFirst Published Aug 17, 2019, 9:36 AM IST
Highlights

டெல்டா மாவட்டங்களில்  சம்பா சாகுபடிக்காக கல்லணை இன்று திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் 6 அமைச்சர்கள் மற்றும் 6 மாவட்ட ஆட்சியர்கள் , வருவாய்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதால், காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து தற்போது 112 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி காவிரி டெல்டா பகுதியில் ஒருபோக சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணையை வந்தடைத்தது.  இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு, கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் ஒரு போக சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

விழாவில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சம்பத் மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை வேளாண்மைத் துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்று மதகுகள் வர்ணங்கள் பூசப்பட்டு, தண்ணீர் திறப்புக்காக புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. 

தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

click me!