
முதலமைச்சர் கையை வெட்டுவேன் என்ற தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் வழக்கு போடுவது அரசியல் பழிவாங்கும் செயல் என்று கலைராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
முதல்வர் ஓபிஎஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவோம். அங்குள்ளவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் ”” வந்து பார்க்கட்டும் , இந்த ஓபிஎஸ் யாருன்னு தெரியாதா , அவர் கைய வச்சு பார்க்கட்டும் அவர் உடம்பில் கையே இருக்காது ”” என்று பேட்டி அளித்திருந்தார்.
பின்னர் இது பற்றி தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டி அளித்த போது இது யுத்த களம் யுத்தத்துக்கு வந்த பின்னர் தலை போகுமா ? கை போகுமா யாருக்கு என்னங்க தெரியும். மகா பாரத யுத்தம் நடந்தது கர்ணன் நல்லவன் தான் குத்துறான்னு தான் சொன்னார் கண்ணன். ஆகவே அது தொண்டர்களை உற்சாகப்படுத்த சொன்னது என்றார்.
பின்னர் பேசிய கலைராஜன் நான் வெட்டுவேன்னு சொல்லவில்லை உடம்பில் உறுப்பு இருக்காது என்றுதான் சொன்னேன் என்று மாற்றி கூறினார்.
கலைராஜனின் வன்முறை பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக மாணவரணி இணைச்செயலாளரும் , உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான என்.செல்லப்பாண்டியன் என்பவர் புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் பிரிவு 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் , வன்முறையை தூண்டுதல்) 506(1) கொலைமிரட்டல் ) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கலைராஜன் தான் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வாபஸ் பெற்ற பின்னர் வழக்கு போட்டுள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்.