க. அன்பகழனின் வாழ்க்கை வரலாறு... திமுகவில் நீண்ட நெடிய பயணம்!

By Asianet TamilFirst Published Mar 7, 2020, 8:21 AM IST
Highlights

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை க. அன்பழகன் வகித்துள்ளார். 1971-1976 வரை சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1989-1991, 1996-2001-ல் கல்வி அமைச்சராகவும் 2006- 2011-ல் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திராவிட இயக்க மூத்த முன்னோடிகளில் ஒருவர். அரசியல்வாதி, சிந்தாந்தவாதி, எழுத்தாளர், பேச்சாளர் என்று பன்முக தன்மை கொண்டவர். தமிழ் சமுதாயத்துக்காக பல வகையில் உழைத்த க. அன்பழனின் வாழ்க்கை வரலாறைப் பார்ப்போம்.
இன்றைய திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் எம்.கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 1922-ம் ஆண்டு டிசம்பர் 19 அன்று மகனாக பிறந்தார் க. அன்பழகன். அவருக்கு அவருடைய பெற்றோர் ராமையா என்று பெயரிட்டனர். ஆனால், திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்டதால் தனது பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.

 
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தமிழ் (ஹானர்ஸ்) படித்தவர் அன்பழகன். 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டுவரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றினார்.
1945 பிப்ரவரி 21-ல் வெற்றிச்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்புசெல்வன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வெற்றிச்செல்வி மறைவுக்கு பிறகு சாந்தகுமாரி என்பவரை இரண்டாம் மணம் புரிந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற இரு மகன்களும், ஜெயக்குமாரி எனும் மகளும் உள்ளனர்.
க. அன்பழகன், முன்னாள் முதல்வர் அண்ணாவின் நம்பிக்குரிய் தளபதிகளில் ஒருவர். க. அன்பழகன் 1957- 1962 வரை சட்ட மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருந்தார். 1967-ல் திருசெங்கோடு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு சென்றார். 1971 வரை எம்.பியாக செயல்பட்டார்.

 
1971- 1984 வரை சென்னை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் க. அன்பழகன். 1984-ல் ஈழ விவகாரத்தில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
1984- 1988-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1989-1991 வரை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1996-2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.
கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை க. அன்பழகன் வகித்துள்ளார். 1971-1976 வரை சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1989-1991, 1996-2001-ல் கல்வி அமைச்சராகவும் 2006- 2011-ல் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.


1991-ல் அண்ணாநகர் தொகுதியிலும் 2011-ல் வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிட்ட அன்பழகன் தோல்வி அடைந்தார். ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் 8 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் ஒரு முறை தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 
1977-ம் ஆண்டு திமுகவின் பொதுச்செயலாளராக க.அன்பழகன் பொறுப்பேற்றார். அந்தப் பதவியில் இறுதிக்காலம் வரை பதவியில் இருந்தார்.
சிறந்த பேச்சாளராரும் எழுத்தாளருமான க.அன்பழகன்,  பாரி நிலையம், தமிழர் திருமணமும் இனமானமும், தமிழின காவலர் கலைஞர், தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் உள்பட பல நூல்களை எழுதியுள்ளார். 

click me!