
அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறி கிடப்பதாகவும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்டு வந்த அதிமுக எனும் எஃகு கோட்டை டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்து சிறிது சிறிதாக தகர்க்கபட்டு வருகிறது.
அதிமுகவை உருவாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணியாக பிரிந்து விரிசல் விட ஆரம்பித்தது. அப்போது ஜா.ஜெ என்ற இரு அணிகள் உருவாகினாலும் மாபெரும் தொண்டர்கள் ஆதரவுடன் அதிமுகவை கைப்பற்றினார் ஜெயலலிதா.
அனைத்து துறைகளிலும் பெண்களை பின்னுக்கு தள்ள துடிக்கும் சில ஆண்கள் மத்தியில் மிகவும் சிரமமான அரசியலில் தன்னை முன்னிலை படுத்தி அனைவரையும் தனக்கு கீழே வைத்து வலிமையுடன் கட்சியை வழிநடத்தினார் ஜெயலலிதா.
ஆனால் முதலமைச்சர் பதவி மட்டும் ஒ.பி.எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பதவி ஆசை யாரை விட்டது என்பது போல் சசிகலா ஒ.பி.எஸ்சின் பதவியை வலுக்கட்டாயமாக பறித்தார்.
இதைதொடர்ந்து ஒ.பி.எஸ்சின் வீடு தேடி படையெடுத்தது அதிமுக தொண்டர்கள் கூட்டம். பின்னர், சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்கும் நேரம் பார்த்து பலநாட்களாய் வராத சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு திடீரென சசிகலாவின் தலையில் மண்ணை வாரிபோட்டது.
ஒ.பி.எஸ் பின்புலத்தில் பாஜக தான் இயங்குகிறது என்பது தெரிந்தும் திமுகவை குற்றம் சுமத்தினர் சசிகலா தரப்பினர்.
எடப்பாடி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒவ்வொரு விசயத்திலும் மத்திய அரசுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்ததால் தினகரனுக்கு எதிராக அதிமுக செயல்பாடுகள் நகர்ந்தன.
41 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த தினகரன் இரண்டாக இருந்த அதிமுகவை மூன்றாக பிரிக்க திட்டமிட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என 34 பேர் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி கட்சியை தினகரனிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சி கலைக்கப்படும் என எடப்பாடியை மிரட்டி வருகிறார்கள்.
இதனிடையே சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், எங்களுக்கே கட்சியையும் சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் லாரி லாரியை பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் நன்றாக பேட்டி அளித்தாலும் போக போக பேரவையில் செம்ம சொதப்பல்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்து கொண்டு கட்சியை நடத்த முடியாது என்றும், கட்சிக்கு தொண்டர்களின் பலம் அவசியம் எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடப்பதாகவும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்தவுடன் பிரதமரை சந்திப்போம் எனவும் தெரிவித்தார்.
ஒரு பேரவையையே ஒழுங்காக வழிநடத்த முடியாத தீபாவால் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுகவை வழி நடத்த வேண்டும் என்று நினைப்பது சாத்தியமா? என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.