மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எப்படியோ, அதுபோலவே இப்போது எடப்பாடிக்கு இளங்கோவன் என்பதுதான் அதிமுக வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. யார் அந்த இளங்கோவன்? எடப்பாடியின் ஹிஸ்டரியை தெரிந்த அனைவருக்கும் கண்டிப்பாக இந்த இளங்கோவனை தெரிந்திருக்கும்.
ஆமாம் அவரே தான்... சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த இளங்கோவன். தமிழ்நாடு மத்தியக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவராகத் பொறுப்பு வகிக்கிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் எடப்பாடி அமைச்சராக இருந்த போது, எடப்பாடியின் நிழலாக இருந்தவர் இந்த இளங்கோவன். எடப்பாடி சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர். சேலம் கிழக்கு மாவட்டத்தில் நாளுக்கு நாள் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள அவரால் வளர்க்கப்பட்டவர் தான் இந்த இளங்கோவன். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எடப்படியிடம் நெருக்கமானார் இளங்கோவன்.
எடப்பாடி அமைச்சராக இருந்தபோதே சேலம் மாவட்டக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பதவியை இளங்கோவனுக்கு கொடுத்தார். அப்போது எடப்பாடியின் வரவு செலவு கணக்குகளைக்கூட இளங்கோவன்தான் பார்த்துவந்தார். எடப்பாடி எங்கே இருக்கிறார், அவரோடு பேசலாமா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் அமைச்சராக இருந்த சமயத்திலேயே அதிகாரிகள் இளங்கோவனை தொடர்புகொண்டு பேசுவார்களாம். போன் போடுவார்கள். எடப்பாடியின் மகன் அரசியல் பக்கமே வராததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் இளங்கோவன். ஜெ. மறைவுக்குப் பிறகு எடப்பாடிக்கு ஆதரவான காய் நகர்த்தல் எல்லாமே இளங்கோவன் மூலமாகத்தான் நடந்தன. எடப்பாடிதான் அடுத்த முதல்வர் என இளங்கோவன் அந்த சமயத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடமும் வெளிப்படையாகவே சொல்லிவந்திருக்கிறார்.
இந்நிலையில், கூவாதூரில் நடந்த சில நிகழ்விற்குப் பின் எடப்பாடி முதல்வர் ஆனார். சேலத்தில் ஒரு சின்ன வட்டத்திற்குள் சென்னைக்கு வந்தார் இளங்கோவன். எந்த நேரமும் முதல்வர் அலுவலகத்திலேயே இளங்கோவனைப் பார்க்க முடிந்தது. முதல்வரைப் பார்க்க யார் வந்தாலும் முதலில் இளங்கோவன் நினைத்தால் மட்டுமே முதல்வரைப் பார்க்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கினார். எடப்பாடியும் ‘இளங்கோவனைப் பாருங்க.. இளங்கோவனைக் கேட்டுக்கோங்க...’ என இளங்கோவனை முன்னிலை படுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அமைச்சர்களை அசால்டாக டீல் செய்வதில் இளங்கோவன் புலிதான், ஜெயலலிதா இருந்தபோது சசிகலாகுடும்ம்பதில் உள்ளவர்கள் அமைச்சர்களை பெயர்சொல்லி அழைப்பதுண்டு ஆனால் இளங்கோவனோ அமைச்சர்களைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடாமல் அவர்கள் துறையின் பெயரைச் சொல்லி அழைப்பாராம். இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரை, ஏம்பா ‘ஹெல்த்து... இந்த வேலையை சீக்கிரமா முடிங்க..’ என ஒரு ஃபைலை நீட்டி இருக்கிறார்.
இதனால் செம கடுப்பான விஜயபாஸ்கர், ‘என்னது ஹெல்த்தா? எனக்கு பேரு இல்ல? என் பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க.. இல்லை சார்ன்னு கூப்பிடுங்க... நான் என்ன நீங்க வெச்ச ஆளா? இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வெச்சுக்காத...’ என எரிந்து விழுந்துள்ளார். அதேபோல, அமைச்சர் கரூர் விஜயபாஸ்கரிடமும் திட்டு வாங்கியிருக்கிறார் இளங்கோவன். ஆனால், இன்னும் அதேபோலத்தான் இருக்கிறாராம்.
இதனையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் சரோஜா தனது துறை சம்பந்தமாக பேச முதல்வரைச் சந்தித்திருக்கிறார். அவரிடம் முதல்வர், ‘இது சம்பந்தமாக நீங்க இளங்கோவனைப் பாருங்க...’ என சொல்ல, டென்ஷனான சரோஜா, ‘நான் எதுக்கு அவரைப் பார்க்கணும்? அவருக்கும் என் துறைக்கும் என்ன சம்பந்தம்? அவரையெல்லாம் என்னால் பார்க்க முடியாது...’ முதல்வரின் மூசில் அடித்ததைப்போல சொல்லிவிட்டு வந்தாராம்..
அமைச்சர்கள் வட்டாரத்தில் இது சம்பந்தமாக டிஸ்கஷன் நடந்திருக்கிறது. ‘ஏற்கெனவே அம்மா இருந்த சமயத்தில் சின்னம்மா... சின்னம்மான்னு அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினோம். இதெல்லாம் இனி இருக்க கூடாதுன்னுதான் அந்த குடும்பத்தையே கழட்டி விட்டோம் ஆனால் இப்போது, இந்த ஆளு இன்னொரு சின்னம்மா மாதிரி வளர்ந்துட்டு இருக்காரு. இதை ஆரம்பத்துலயே கில்லி எறியணும் இல்லன்னா. சும்மா அவரு சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருக்க வேண்டாம். எது சொல்றதுன்னாலும் எடப்பாடி சொல்லட்டும் என அமைச்சர்கள் கோபமாக இருக்கிறார்கள்.