ஜெயலலிதா படத்துடன் இணைந்தது சசிகலா படம் – பா.வளர்மதி பதவியேற்பில் புதிய காட்சி

First Published Jan 13, 2017, 1:32 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார். இதைதொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

பின்னர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை, அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்கும்படி, அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மகளிர் அணியினர் என பலரும் வற்புறுத்தினர்.

இதையடுத்து செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த மாதம் 31ம் தேதி சசிகலா, அதிமுக பொது செயலாளராக பதவியேற்றார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் அவரது படம் வைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், தற்போதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பா.வளர்மதி, சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் பதவியை பொறுப்பேற்று கொண்டு, தனது பணியை தொடங்கினார்.

தனது இருக்கையின் பின்புறம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் அமைத்து, அதில் மாலையிடப்பட்டு இருந்தது. வழக்கம்போல் அதிகாரிகளின் மேஜையில் இருப்பதுபோலவே, பா.வளர்மதியின் மேஜையிலும் ஜெயலலிதாவின் படம் இருந்தது. அதனுடன், அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் படமும் உள்ளது.

click me!