ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அரசு அனுசரிக்க கூடாது..! ஹைகோர்ட்டில் முறையீடு..!

First Published Nov 28, 2017, 11:22 AM IST
Highlights
jayalalitha memorial day issue case in high court


ஜெயலலிதா இறப்பில் மர்மம் நீடிப்பதால், அவரது நினைவுதினத்தை அரசு அனுசரிக்கக்கூடாது என வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், மாரடைப்பால் ஜெயலலிதா இறந்துவிட்டதாக டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரைப் பார்த்ததாகவும் அவர் நலமாக இருக்கிறார் எனவும் கூறிய அமைச்சர்களே, அவரின் இறப்பிற்குப் பிறகு, ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என முரண்பட்ட கருத்தை தெரிவித்தனர். இதனால் சர்ச்சைகளும் சந்தேகங்களும் கிளம்பின.

மேலும், டிசம்பர் 5க்கு முன்னரே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, நடந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை உறுதி செய்து படிவங்களில் இடப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

அதேபோல, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5ம் தேதியை அவரது நினைவு தினமாக அனுசரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவுதினத்தை அரசு அனுசரிக்கக்கூடாது என வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் மற்றும் சுந்தர் அமர்வு முன்பு முறையிட்டார்.

அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. எனவே அதுதொடர்பாக விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. மேலும் அவரது கைரேகை பதிவு தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதிதான் இறந்தாரா என்பதில் சர்ச்சையும் சந்தேகமும் உள்ளதால், அன்றைய தினத்தை ஜெயலலிதாவின் நினைவுதினமாக அரசு அனுசரிக்கக்கூடாது என துரைசாமி முறையிட்டார்.

இந்த முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உரியதுதான் என்று தெரிவித்த நீதிபதிகள், அதை மனுவாக தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தினர்.
 

click me!