
முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து விசாரித்து விட்டுசெல்கின்றனர்.
இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கேரள கவர்னர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் வந்தனர்.
மருத்துவமனைக்கு சென்று முதல்வர் உடல்நலம் குறித்து கேட்டறிந்த கிரண்பேடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
முதலமைச்சர் ஜெயலலிதா என் மீது மிகுந்த அக்கறை உடையவர்.
அவருடைய உடல்நலம் குறித்து பார்ப்பதற்காக இன்று மருத்துவமனைக்கு வந்தேன். முதலமைச்சர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கி கூறினர். அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரெட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் உடல்நிலை குறித்து வரும் தகவல்களை யாரும் பொருட்படுத்த வேண்டாம். மருத்துவர்கள் தான் நமது கடைசி நம்பிக்கை. முதல்வர் நன்கு குணமடைந்து வருகிறார். சிகிச்சை முழு ஒத்துழைப்பு தருகிறார் என மருத்துவர்கள் கூறும் போது அதை நாம் நம்ப வேண்டும்.
கவர்னர் ஆன பின் முதலமைச்சரை சந்திக்க முயன்றேன், முடியவில்லை. அவரிடம் பாண்டிச்சேரி விமானநிலையம் இடம் குறித்து பேசினேன்.
விரைவில் அவர் குணமடைந்து வருவார் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது சிகிச்சை அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பதால் விரைவில் அவர் குணமடைவார் என நம்புகிறேன்.
இந்தியாவில் உள்ள முக்கியமான மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழக மக்களால் நேசிக்கப்படுபவர். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.