
தாலிக்கு தங்கம் என்ற மகத்தான திட்டத்திற்கு திமுக மூடு விழா செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சன் செய்துள்ளார். சென்னையிலிருந்து நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த வாரம் முதல் திங்கள், புதன், வெள்ளி என ஐந்து முறை கையெழுத்திட்டார். இந்த நிலையில், கடைசி நாளாக கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திருச்சியில் உள்ள கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் காட்டிய அன்பு என்னை திக்கு முக்கு ஆட செய்தது. காலை ஒருவர் வீடு, மதியம் ஒருவர் வீடு, மாலை ஒருவர் வீடு என இதுவரை 300க்கும் அதிகமானோர் சேர்ந்து என்னை கழக சகோதரர்கள் அன்புடன் கவனித்தார்கள். பத்திரிக்கையாளர்களை முறையாக பேட்டி எடுக்க கூட காவல்துறையினர் இங்கு அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பல அராஜகங்களை திமுகவினர் செய்து வருகின்றனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் சென்ற போது எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறினர். ஏற்கனவே விதைகள் போடப்பட்டது. ஆனால், தற்போது மு.க.ஸ்டாலின் சென்றிருப்பது அவருடைய சொந்த பயணத்திற்காக அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்று தெரியவில்லை. என்ன கிழிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் வாய் திமிருடன் பேசி வருகிறார். 2 கோடி 14 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள்.
5 வருடத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிதி நம்மிடம் உள்ளதா? கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என்று மக்களை திசைதிருப்பி ஏமாற்றி வாக்குகளை திமுகவினர் பெற்றார்கள். தாலிக்கு தங்கம் என்கிற மகத்தான திட்டத்திற்கு மூடு விழா செய்து விட்டனர். நிதிநிலையை பெருக்குவதற்கு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளது என்பதனை யோசிக்கவே இல்லை. அதற்காக வந்தவுடன் அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் குழு இதுவரை என்ன செய்துள்ளது? திறமையற்ற நிர்வாகம் தமிழகத்தை ஆண்ட வருகிறது. நான் கையெழுத்திட வரும்போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு கொடுக்கும் வரவேற்பை பொருத்து கொள்ள முடியாமல் வழக்கு போட்டால், அதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.