Jaibhim:இனி சேலத்தில் சூர்யா படம் வெளியிடக்கூடாது.. தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாமக எம்எல்ஏ ‘அன்பாக’ உத்தரவு!

By Asianet TamilFirst Published Nov 18, 2021, 10:45 PM IST
Highlights

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களைத் தவறாகச் சித்திரித்து உள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்கள் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பெரிதும் கொந்தளிப்பாக உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் இனிவரும் காலங்களில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் மற்றும் அந்த நடிகர் குடும்பத்தினரின் திரைப்படங்களை தயவு செய்து திரையிட வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளார்களுக்கு பாமக எம்.எல்.ஏ. அருள் கடிதம் எழுதியுள்ளார்.

'ஜெய்பீம்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்துவிட்டது. கடலூரில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகளை வைத்து சர்ச்சைகள் உருவாகிவிட்டன. படத்தில் கொடூரமான மனித உரிமை மீறல் குற்றத்தை நிகழ்த்தும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும் அவருடைய வீட்டில் இருக்கும் அக்னி கலச காலாண்டரும் சர்ச்சைக்கு வித்திவிட்டுவிட்டது. அக்னி கலச காலாண்டர் காட்சி நீக்கப்பட்டபோதும், பாமக ஓயவில்லை. நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கேட்டு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்துக்கு சூர்யா அளித்த பதில் கடிதத்தால் பாமக தலைமை கொந்தளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்பிறகே வன்னியர் சங்கத்தையும் அக்கட்சி களத்தில் இறக்கிவிட்டதாகவும் பேசப்படுகிறது. சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று பாமக மாவட்டச் செயலாளர் பேசியது, சூர்யாவும் ஜோதிகாவும் மன்னிப்புக் கோர வேண்டும், நஷ்ட ஈடு 5 கோடி வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கமும் சூர்யாவுக்கு கெடு விதித்தது. இந்நிலையில் ‘ஜெம்பீம்’ படத்தில் வன்னியர்கள் அவமதிக்கப்பட்டதால் மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியது.

இந்நிலையில் சேலத்தில் சூர்யா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நடித்த படங்களை வெளியிடக் கூடாது என்று சேலம் தெற்கு பாமக எம்.எல்.ஏ. அருள், சேலம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “திரைப்பட நடிகர் சூர்யா நடித்து ஓ.டி.டி.யில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களைத் தவறாகச் சித்திரித்து உள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்கள் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பெரிதும் கொந்தளிப்பாக உள்ளனர். 

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் இனிவரும் காலங்களில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் மற்றும் அந்த நடிகர் குடும்பத்தினரின் திரைப்படங்களை தயவு செய்து திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எம்.எல்.ஏ. அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
 

tags
click me!